Monday, December 2, 2013

7. தேவபூமியில் சில நாட்கள் - ஜாகேஷ்வர்(உத்தர்கண்ட்) யாத்திரை_2012


திருச்சிற்றம்பலம்.

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 
(பாடல் எண் 11-முதல் தந்திரம்-சிவபரத்துவம்-திருமந்திரம்)


7. தேவபூமியில் சில நாட்கள். 

குமாவுன் பிரதேசத்தின் நீதித் தெய்வம் கோலு தேவதாவின் கதை.

நீதிவழுவாது ஆட்சி புரிந்த கோலு தேவதைக்கு பற்பல திருநாமங்கள் உண்டு. கோல்ஜியூ, கோலு தேவ்தா, ராத்காட் கோலு, கோரியா, க்வால் தேவதா, க்ரிஷன்-அவதாரி, பலதாரி, பாலகோரியா, தூடாதாரி, நிரங்காரி, கொல்லு, கொல்லா, ஹரியா கோலு, சமந்தாரி கோலு, த்வா கோலு, கொரைல், மற்றும் குகுத்தியா கோலு எனப் பற்பல திருநாமங்கள் கொண்டவர் இந்த கோலு தேவதா. 

Inline images 5
கோலு தேவதா திருக்கோவில், சித்தாய் 
(அல்மோரா-உத்தரகண்ட்)
கோலு தேவதாவை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அம்சமாகவும், பைரவரின் அம்சமாகவும் வழிபடுகிறார்கள். கவுர் பைரவர் என்றழைக்கப்படும் ஸ்ரீபைரவர், ஸ்ரீகிருஷ்ணரின் அம்சம் என்றும் கூறுகிறார்கள். 
Inline images 6
நீதி தேவன் கோலு தேவதா.

சிவனின் அம்சமான காலபைரவரும் இந்த கவுர்பைரவரும் ஒன்றேதானா அல்லது வேறு வேறா என்று தெரியவில்லை! குமாவுன் பிரதேசத்தில் உள்ள கரிசம்பாவத் (Gari Champavat) என்ற பகுதியை ஆண்ட சாந்த் வமிசத்தின் புகழ் வாய்ந்த மன்னரான ஜால்ராய் என்பவரது மகனான அரசர் ஹால்ராயின் புத்திரர் தான் இந்த கோலு தேவதா. இந்த சாந்த் வமிசத்தில் தான் ராஜா ஹரிச்சந்திரனும் உதித்தவர் என்று இப்பகுதியில் நம்புகிறார்கள்.

கோலுவின் கதை:
மன்னர் ஹால்ராய் ஒரு முறை தனது படையினருடன் பக்கத்தில் உள்ள ஒரு வனத்துக்கு வேட்டையாடச் செல்கிறார். 

அந்த நேரத்தில் இரு காளைகள் கடுமையாக ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொண்டு போரிடுவதைப் பார்க்கிறார் மன்னர். அவற்றை சமரிடுவதிலிருந்து பிரிக்க அவர் செய்யும் முயற்சிகள் பலிக்காமல் போகின்றன.

களைப்படைந்த மன்னருக்கு நீர் கொண்டு வருவதற்காக அவரது மெய்க்காவல் படையைச் சேர்ந்த இருவர் சற்று தூரத்தில் இருக்கும் இருக்கும் ஒரு நீரோடைக்கு செல்கிறார்கள். நீர் முகந்து வரும் போது அங்கே ஒரு மரத்தடியில் அழகிய இளம்பெண் (கலிங்கா) நிஷ்டையில் ஆழ்ந்திருப்பதைக் காண்கிறார்கள். 

விளையாட்டாக அவள் முகத்தில் தண்ணீரை ஒருவன் தெளிக்கிறான். இந்தச் செய்கையால் தனது நிட்டை கலைந்து கண் விழித்த அந்தப் பெண் அவர்களைப் பார்த்து, ‘சண்டையிடும் இரண்டு மாடுகளைப் பிரிக்கத் தெரியாத கையாலாகாத அரசனின் முட்டாள் அடிமைகள் தானே நீங்கள்? என்று கேட்கிறாள். இதனைக் கேட்டு வியந்த அந்த வீரர்கள் செய்தியை மன்னனிடம் தெரிவிக்கவும்,  மன்னன் கலிங்காவைப் பார்க்க வருகிறான். 

கலிங்காவின் அறிவிலும், அழகிலும் மயங்கிய மன்னன் அவளை மணம் புரிய விரும்புகிறான். கலிங்காவோ தனது தந்தையின் அனுமதி இன்றி திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டேன் என்கிறாள்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத மன்னன், கலிங்காவின் தந்தையைச் சந்திக்க செல்கிறான். கலிங்காவின் தந்தை ஒரு குரூபியாகவும், தொழுநோயாளியாகவும் இருப்பதைக் காண்கிறான். எனினும் கலிங்காவின் மேல் கொண்ட காதல் மாறாமல், தனது விருப்பத்தை அவளது தந்தையிடம் தெரிவித்து சம்மதம் பெறுகிறான்.

கலிங்காவை கடிமணம் புரிந்து கொண்டு தன் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறான். மன்னனுக்கு ஏற்கனவே ஏழு மனைவியர் இருந்தும் அவர்கள் மூலம் அவனுக்கு புத்திர பாக்கியம் உண்டாகவில்லை. கலிங்கா அரசன் மூலம் கருத்தரிக்கிறாள். அவளது மகப்பேறு காலம் நெருங்கும் சமயத்தில் மன்னன் தலைநகரத்தை விட்டு வெளியே போகவேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது. 

எனவே மன்னன் அரசியரிடம், பிரசவகாலத்தின் போது கலிங்காவுக்கு உறுதுணையாக இருக்கச் சொல்லிவிட்டு வெளியூர் செல்கிறான். 

மன்னன் சென்ற பிறகு கலிங்காவுக்கு பிரசவத்தின் போது அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. இதனைக் கண்டு பொறாமை கொண்ட ஏழு ராணிகளும், மருத்துவச்சியை மிரட்டி கைக்குள் போட்டுக் கொண்டு கலிங்காவுக்குத் தெரியாமல் குழந்தையை அகற்றி குழந்தையின் இடத்தில் ஒரு பூசணிக்காயை வைத்து விடுகிறார்கள். மருத்துவச்சியிடம் நிறைய பொற்காசுகளைக் கையூட்டாகத் தந்து அந்தக் குழந்தையை கொன்று விடச் சொல்கிறார்கள். 

ஆனால் இரக்கமுள்ள நல்லவளான மருத்துவச்சியோ குழந்தையை ஒரு கூடையில் பொற்காசுகளுடன் வைத்து ஒரு ஆற்றில் விட்டுவிடுகிறாள். ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு செம்படவனிடம் அந்த குழந்தை கிடைக்கிறது. பிள்ளை இல்லாத அவன் அந்த அழகிய குழந்தையை கொண்டு சென்று மனைவியிடம் கொடுக்கிறான். வாராது வந்த செல்வமாக வந்த அந்தக் குழந்தையை தமது சொந்தக் குழந்தை போல சீராட்டி பாராட்டி வளர்க்கிறார்கள். 

இதற்கிடையே இந்த ஏழு ராணிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு கலிங்கா ஒரு பூசணிக்காயை பெற்றெடுத்தவள். மேலும் அவள் ஒரு சூனியக்காரி என்றும், தொடர்ந்து அரண்மனையில் இருந்தால் நாட்டுக்கும், மன்னனுக்கும் ஆபத்து என்றெல்லாம் விதவிதமான வதந்திகளைப் பரப்பி அரசன் தலைநகர் திரும்பு முன்னரே சாமர்த்தியமாக கலிங்காகாவை அரண்மனையில் இருந்து வெளியேற்றி அனுப்பிவிடுகிறார்கள். திரும்ப வந்த மன்னவன் தனது இராணிகள் சொன்ன கட்டுக்கதைகளை நம்பி வாளாவிருந்து விடுகிறான்.

ஆனால் பையனோ புத்திசாலியாக வளருகிறான். அவனது சாதுர்யமான செய்கைகள் படித்தவர்களையும் விரும்பி அவனை மதிக்கும்படியாக இருக்கின்றன. அவன் தக்க பருவத்துக்கு வரும்போது அவனது வளர்ப்புத் தந்தை பையனிடம் அவன் வந்த விதம் பற்றி கூறுகிறான். இதற்கிடையே மருத்துவச்சியும் தற்செயலாக இந்தப் பையனைச் சந்திக்க நேருகிறது. அவனது பிறப்பு பற்றி அவள் கூறிய செய்திகளைக் கேட்டு தனது தாயை சந்திக்கவேண்டும் எனவும், மன்னனுக்கு உண்மை நிலவரம் தெரிய வைக்க வேண்டும் எனவும் விரும்புகிறான். தக்க தருணத்துக்காக அந்த இளைஞன் காத்திருக்கிறான்.

அவன் காத்திருந்த அந்தத் தருணமும் வந்தது. தனது பகுதிக்கு மன்னன் தனது பட்டத்து ராணிகளுடன் விஜயம் செய்யவிருப்பதை அறிந்த இந்த இளைஞன் ஒரு மரக்குதிரையை எடுத்துக் கொண்டு மன்னன் முகாமிட்டிருந்த வனப் பகுதிக்கு செல்கிறான். மன்னன் ஒரு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த இளைஞன் தனது மரக்குதிரையை எடுத்துக் கொண்டு ஆற்றில் இறங்குகிறான். இளைஞனின் செய்கையை கண்ட மன்னன் அவனை அழைத்து, ‘மரக் குதிரையை ஆற்றில் இறக்கி என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்கிறான். இளைஞனோ ‘மாட்சிமை பொருந்திய மன்னரே. எனது குதிரையை நீர் பருக அழைத்து வந்திருக்கிறேன் என்கிறான். இதனைக் கேட்ட மன்னன் நகைத்து, ‘அடே முட்டாள் பையா, பார்த்தால் அறிவுடையவன் மாதிரி தெரிகிறாய். ஆனால் நீ செய்வது அபத்தமாக இருக்கிறதே. மரக் குதிரை எப்போதாவது நீர் அருந்துமா? என்று பரிகாசமாக கேட்கிறான். 

தக்க சமயத்துக்காக காத்திருந்த இளைஞன் பணிவுடன், ‘அரசே, நான் முட்டாள்தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு விஷயம், ராணிக்கு பூசணிக்காய் குழந்தையாக பிறக்கும் என்பதை நாட்டின் மாட்சிமை பொருந்திய அரசரான தாங்கள் உட்பட இந்த நாட்டில் அனைவரும் எந்தக் கேள்வியும் கேட்காமல், உண்மை நிலவரத்தை ஆராயாமல் கண்ணை மூடிக் கொண்டு நம்பும் போது, எனது மரக் குதிரை நீர் அருந்துமா என்பதில் மட்டும் எப்படி தங்களுக்கு சந்தேகம் வருகிறது என்பது தான் புரியவில்லை என்றான். 

இளைஞனின் பதிலால் அதிர்ச்சி அடைந்த மன்னன் அவனை அருகில் அழைத்து அவனிடம் தனியே பேசி, நடந்த அனைத்தையும் அறிந்து கொள்கிறான். 

பொறாமையினால் தவறிழைத்ததை ஒப்புக் கொண்ட ராணிகளை தண்டித்த அரசன் தனது மனைவி கலிங்காவை கண்டுபிடித்து அவளை அரசியாக்கி, தனது மகனை தனது வாரிசாக பட்டம் சூட்டுகிறான். 

தனது தந்தையின் காலத்துக்கு பின்னர் கோலு முடி சூடிக் கொள்கிறான். ஆட்சிக்கு வந்ததும் நீதி, நேர்மை வழுவாது கோலோச்சுகிறான். சுபிட்சமாக நாட்டை வைத்திருக்கும் தமது மன்னனை நாட்டு மக்கள் கடவுளாக வணங்குகிறார்கள்.

கோலு மன்னனது காலத்துக்குப் பின்னரும் இன்றளவிலும் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும், கோவில்களிலும் இறைவனாகத் துதிக்கப்பட்டு வருகிறார். நீதி, நியாயத்துக்குட்பட்ட எந்த ஒரு கோரிக்கையையும் கோலு தேவதா நிறைவேற்றித் தருவார் என்று மக்கள் முழுமையாக நம்புகிறார்கள் என்பதற்கு கோலு தேவதாவுக்கு அமைந்திருக்கும் எண்ணற்ற கோவில்களும், அங்கே குவிக்கப்படும் கோரிக்கைக் கடிதங்களும், கோரிக்கைகள் நிறைவேறிய பின்னர் கோவில் வளாகத்தில் கட்டப்படும் மணிகளுமே என்றென்றும் சாட்சியாக விளங்குகின்றன.

Inline images 2
கோரிக்கைகளும், மணிகளும். 

Inline images 3
மணித் தோரணங்கள்.

Inline images 4
கோலு தேவதாவின் கருவறைக்குள்...

நாங்கள் தரிசித்த சித்தாய் கோவிலில் வீற்றிருக்கும் கோலுதேவதாவே உண்மையான கோலுதேவதா என்று அந்தக் கோவில் பண்டிட் கூறினார். குமாவுன் பிரதேசத்தின் எல்லா ஊரிலும் கோலுதேவதா கோவில் கொண்டிருக்கிறார். 
Inline images 1
ஜெய் கோலு தேவதா.
(குறிப்பு: கோலு தேவதாவின் கதைகள் பலவாறாகக் கூறப்படுகின்றன. எனினும் பெருவாரியான மக்கள் நம்பும் இந்தக் கதையை நாமும் நம்புவோமாக) 
(பகிர்வுகள் தொடரும்) 

6. தேவபூமியில் சில நாட்கள் - ஜாகேஷ்வர்(உத்தர்கண்ட்) யாத்திரை_2012

திருச்சிற்றம்பலம்.

இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான்; தோற்றி
இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான்; - இறைவனே
எந்தாய் எனஇரங்கும்; எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.
(காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி)

தெளிவுரை : பொதுவாக, உயிர்க் கூட்டங்களின் வினைக்கு ஈடாக அவர்களைத் தோற்றுவிக்கும் உடம்பினின்றும் பிரித்தும் செயல் புரியும் இறைவன், சிறப்பாகத் தன்னையன்றி வேறுயாரையும் புகலாக அடையாத அன்பர்களைத் துன்பத்தினின்றும் விடுவித்து, நலம் அருளுவான்)

====
6. தேவபூமியில் சில நாட்கள்.

எங்களது உத்தர்கண்ட் பயணத்தின் முதல் தரிசனமாக கேட்டவருக்கு கேட்ட வரம் அளிக்கும்  கோலு தேவதாவை தரிசித்தோம்.

அல்மோராவிலிருந்து சுமார் ஆறேழு கி.மீ. தூரத்தில் இருக்கும் சித்தாய் (Chitai) ஒரு அழகிய மலைக் கிராமம். சாலையோரத்திலேயே ஜாகேஷ்வர் செல்லும் பாதையில் வலது புறமாக கோலு தேவதாவின் திருக்கோவில் அமைந்திருக்கிறது. அல்மோரா அருகில் உள்ள சித்தாய் கிராமத்தில் உள்ள இந்த கோலு தேவதாவின் திருக்கோவில் குமாவுன் பிரதேசத்தின் மிகப் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். 

நாங்கள் சித்தாய் சென்று சேர்ந்த போது நேரம் காலை பத்தேகால் ஆகி விட்டிருந்தது. இங்கிருந்து ஜாகேஷ்வர் செல்ல மேலும் நாற்பது கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். மலைப் பாதை பல இடங்களில் நிலச் சரிவால் பாதிக்கப்பட்டிருப்பதால் ஜாகேஷ்வர் போய்ச் சேர குறைந்தது மூன்று மணிநேர பயணத்தை மேற்கொள்ள வேண்டி இருக்கும். எனவே முதலில் கோலு தேவதா தரிசனத்தை முடித்துக் கொண்டு வந்து விடுங்கள்.  அதன் பிறகு நாம் சிற்றுண்டி அருந்தலாம் என்று திரு.மனோஜ் சொன்னார்.

மனோஜ் வெளியில் காரில் ஓய்வெடுப்பதாக சொல்ல நாங்கள் சுவாமி தரிசனம் செய்து வர கோவிலுக்குள் நுழைந்தோம்.

Inline images 2
கோலு தேவதா மந்திரின், பிரதான நுழைவு வாயில்.

Inline images 3
நுழையும் போதே தோரணங்களாக நம்மை வரவேற்கும் மணிகள்.

Inline images 4
எங்கிலும் மணித் தோரணங்கள்.

Inline images 5
காணக் கண்கொள்ளாக் காட்சி.

Inline images 6
பக்தர்களின் காணிக்கையாக கட்டிவிடப்பட்டிருக்கும் மணிகள்.

நம்மூரைப் போலின்றி நேரடியாக மூலவரிடம் நாம் போய் ஸ்வாமி தரிசனம் செய்யலாம். அழகான கருவறைக்குள் நாங்கள் நுழைந்தோம். பண்டிட்ஜி உள்ளே அமர்ந்து எங்களை வரவேற்றார். நெற்றியில் திலகமிட்டு எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் கோலு தேவதாவை மனமுருகி பிரார்த்தனை செய்து வணங்கிவிட்டு அங்கே சற்று நேரம் அமர்ந்தோம். கோலு தேவதா பற்றி பண்டிட்டிடம் கேட்டோம். திரு.நடராஜன் ஹிந்தியில் அவருடன் உரையாடினார். சென்னையில் இருந்து புறப்ப்படு முன்னரே நண்பர் திரு.மங்களீஸ்வரன் குமாவூன் பிரதேசம் பற்றிய ஒரு ஆங்கிலப் புத்தகத்தை கன்னிமாரா நூலகத்தில் இருந்து எடுத்து வந்திருந்தார். குமாவூன் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் மிக அற்புதமாக புத்தகத்தை எழுதி இருந்தார்கள். 

ரயில் பயணத்தின் போது கிடைத்த நிறைய நேரங்களில் இந்தப் புத்தகத்தை படித்து குமாவூன் பிரதேசத்தைப் பற்றிய பல செய்திகளை மனதுக்குள் வாங்கிக் கொள்ள இயன்றது. அப்போது படித்த பல கதைகளில் என்னை கவர்ந்த கதை கோலு தேவதாவின் கதைதான். அதைப்பற்றி எனது சஹயாத்திரிகளிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன். வாய்ப்பு கிடைத்தால் இந்த தேவதாவின் கொள்வில்லை தரிசிக்கவேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் ஆன்மீகப் பயணத்தின் முதல் கோவிலாகவே கோலு மந்திர் அமைந்தது தேவபூமியின் முக்கிய கடவுளான கோலு தேவதாவிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த நல்லாசியாக கருதினோம்.

எங்கிருந்து வருகிறோம் என்று பண்டிட் எங்களிடம் கேட்டார். சென்னையில் இருந்து பல ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து நாங்கள் உத்தரகண்ட் மாநிலத்துக்கு ஆன்மீகப் பயணம் வந்திருப்பது பற்றி அறிந்து மிகவும் மகிழ்ந்தார். கோலு தேவதாவைப் பற்றி நாங்கள் படித்து அறிந்திருந்தது குறித்து அவரிடம் தெரிவித்தோம். அது அவரை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாகியது. கோலு தேவதாவின் ஒரிஜினல் கோவில் இதுதான் என்று கூறினார். குமாவுன் பிரதேசத்தின் காவல் தெய்வமாக, நீதி அரசனாக கோலு தேவதா விளங்குவதாக கூறினார். நாங்கள் மீண்டும் கோலு தேவதாவை வணங்கி விட்டு பண்டிட்ஜிக்கு நன்றி கூறிவிட்டு கருவறையை விட்டு வெளியே வந்தோம். வெளிப் பிரகாரத்தில் அமர்ந்திருந்த ஒருவர் எல்லாருக்கும் கையில் கயிறு கட்டி விடுகிறார். மற்றொருவர் துனி மாதிரி அமைந்திருக்கும் யாக குண்டத்தில் இருந்து திருநீற்றை வழங்குகிறார். கருவறைக்குள்ளும், வெளிச் சுற்றிலும் கோலு தேவதாவை வேண்டி நிறைய விண்ணப்பங்கள் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் ஹிந்தி மொழியில் கோரிக்கைகள் அமைந்திருக்கின்றன. ஓரிரு ஆங்கிலக் கடிதத்தையும் பார்த்தேன். வேலை வாய்ப்பு, உத்தியோக மாற்றல், பணி இட மாற்றல் கோரிக்கைகள், நிலத் தாவாக்கள் சாதகமாக முடியவேண்டும், தாமதமாகும் திருமணங்கள் கைகூட, பிள்ளை வரம் என எண்ணிலடங்கா கோரிக்கைகள் இங்கே வைக்கப்பட்டு அவைகள் அனைத்தும் நிறைவேறுவதாகவும், நேர்த்திக் கடனாக பக்தர்கள் மணிகளைக் கட்டி விட்டு செல்வதாகவும் பண்டிட்ஜி கூறினார். கட்டித் தொங்க விடப்பட்ட மணிகளே பல சைஸ்களில் பல ஆயிரக்கணக்கில் இருந்ததைக கண்டோம். நான்கடி உயர மணி ஒன்று தரையில் வைக்கப் பட்டிருக்கிறது. அதற்காக தனியாக பில்லர் ஒன்று கட்டவிருப்பதாக சொன்னார்கள். இது மட்டுமின்றி ஒரு அறை முழுவதும் காணிக்கையாக பெறப்பட்ட மணிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக கூறினார் அங்கிருந்த கோவில் பணியாளர் ஒருவர். நெடிதுயர்ந்த தேவதாரு, மற்றும் பைன், ஃ பர் மரங்கள் கோவிலைச் சுற்றி அமைந்திருக்க, குரங்குகள் நிறைய கோவிலுக்குள் விளையாடிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருந்தன. நல்ல வேளையாக கோவிலுக்கு வரும் பக்தர்களை அவைகள் எந்த விதமான தொந்தரவும் செய்யாமல் இருப்பது வியப்பாக இருந்தது. 

குழந்தைகள், ஆடவர், மகளிர், பெரியவர்கள் என்று சாரி சாரியாக கோவிலுக்குள் வந்து வழிபட்டுக் விட்டு மிகவும் அமைதியாக திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். டூரிஸ்டுகளாக வந்திருந்த நாங்கள் தான் தொணதொணவென பேசிக் கொண்டும், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் இருந்தோம். சுமார் அரை மணி நேரம் கோவிலில் இருந்து விட்டு பசி வயிற்றை கிள்ள காலைச் சிற்றுண்டி நினைவுக்கு வந்தது. கோவிலை விட்டு வெளியே வந்தோம். எங்கள் வரவுக்காக வெளியில் காரில் காத்திருந்த திரு.மனோஜ் எங்களை அருகாமையில் இருந்த சிற்றுண்டி  சாலைக்கு அழைத்துச் சென்றார். காலை பத்தரை மணி ஆகி விட்ட அந்த வேளையில் பூரி, சப்ஜி, சன்னா, ரைதா(தயிர்ப் பச்சடி) இவை மட்டுமே உண்ணக கிடைத்தன. காலையில் எண்ணைப் பலகாரமா என்று யோசித்த நான் ஜாகேஷ்வர் சென்று சேரும் வரை வேறு வழியில்லை என்று உணர்ந்து பூரி, சன்னா, ரைதா போன்றவற்றை சாப்பிட்டு விட்டு, தேநீர் அருந்தி காலை சிற்றுண்டியை ஒருவாறாக முடித்துக் கொண்டு கிளம்பினோம். 

ஆமாம். கோலு தேவ்தாவின் சுவாரஸ்யமான கதையை சொல்ல மறந்து விட்டேன். நீங்களும் என்னை நினைவு படுத்தாமல் விட்டு விட்டீர்களா? சரி. அடுத்த பகிர்வில் ஜாகேஷ்வருக்கு போகும் வரை கிடைக்கும் பயண நேரத்தில் கோலு தேவதாவின் உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமான கதையை சொல்கிறேன். சரிதானே?

(பகிர்தல் தொடரும்)

Saturday, November 16, 2013

5. தேவபூமியில் சில நாட்கள் - ஜாகேஷ்வர்(உத்தர்கண்ட்) யாத்திரை_2012

5. தேவபூமியில் சில நாட்கள்.

அல்மோராவை நெருங்கும் சமயத்தில் சாலையில் ஒரு ஊர்வலத்தைப் பார்த்தோம். ஹோலி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டு ஆடவர் பெண்டிர், இளைஞர் மகளிர் குழந்தைகள் என பலதரப்பட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தார்கள். எதிரில் வருவோர் போவோரிடம் கை குலுக்கி, மென்மையாக அனைத்து வண்ணங்களை மற்றவர் கன்னங்களில் தடவி மகிழ்கிறார்கள். தாரை தப்பட்டைகள் வாசித்துக் கொண்டும், வாத்தியங்களை இசைத்துக் கொண்டும், நடனமாடிக் கொண்டும் சென்று கொண்டிருந்த அவர்கள் எங்கள் காரை வழிமறிக்கவில்லை.

Inline images 1
அல்மோரா சுற்றுவட்டார மக்களின் ஹோலிக் கொண்டாட்டங்கள்.

உத்தரகண்ட் மாநில பதிவு எண் கொண்ட எங்கள் கார் தனியார் கார்; வாடகை டாக்சி அல்ல. எனினும் நாகரீகமாக எங்கள் காருக்கு வழி விட்டார்கள். எங்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கை அசைத்த அவர்களை நோக்கி நாங்களும் கை அசைத்து வாழ்த்துச் சொன்னோம். 

Inline images 2
ஆண், பெண் எல்லா பாலரும் ஹோலி கொண்டாட்டங்களில்.

நல்ல வேளையாக காரின் கண்ணாடிக் கதவுகளை முன்னதாகவே மூடி இருந்ததால் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி பீய்ச்சிய வண்ண நீர் எங்கள் மீது படவில்லை. காரின் கண்ணாடிக் கதவுகள் மீது அவை பட்டுத்தெறித்தன. பொதுவாகவே தமக்குத் தெரிந்தவர்கள் மீது மட்டுமே வண்ணங்களை பூசுவது என்ற நயத்தக்க நனிநாகரிகத்தை அந்த ஊர் மக்கள் கடைப்பிடித்தார்கள். 

எங்களுடன் பயணித்த அன்பர் நடராஜனுக்கு காரில் இருந்து இறங்கி வண்ணங்களைப் பூசவும், பூசிக் கொள்ளவும், ஆனந்த நடனம் ஆடவும் ஆசை. யார் இவர்? சாட்சாத் அந்த நடராஜன் அல்லவா?!!! நான் அவரிடம், ‘இந்த மாதிரி முன் பின் தெரியாத ஊரில் மக்களிடம் பழகுவதை தவிர்த்து விடுவது நல்லது என்றேன். ‘அந்த ஊர்க்காரரான மனோஜ் வண்டியை விட்டு கீழே இறங்காத போது தமக்கு எதற்கு வேண்டாத வேலையெல்லாம்? எனக் கேட்டு அவரது ஆசைக்கு அணை போட்டேன். நிலைமையை புரிந்து கொண்ட அவர் பின்னர் இதற்கு ஆசைப்படவில்லை.

வேதகாலத்தில் இருந்தே அல்மோரா நகரம் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தியர்களே உருவாக்கின நகரம் இது என்கிறார்கள். குமாவுன் பகுதியில் ஆறாயிரம் அடி உயரத்தில் இத்தனை அழகான நகரம் இயற்கையாகவே அமைந்திருப்பது வியப்பான ஒன்று. நிறைய கோவில்களையும், புராதனக் கலாசாரச் சின்னங்களையும், பாரம்பரியங்களையும், பல அரசர்கள் ஆட்சி புரிந்த பெருமையையும் கொண்டது இந்நகரம். 

நந்தாதேவிக்கு கோவில் இருக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தின் மற்ற பகுதிகள் நவீன மயமாக்கப் பட்டுக் கொண்டு பாரம்பர்யத்தை இழந்து வரும் வேளையில் அல்மோரா நகரம் தனது கலாச்சார பெருமையை இன்றளவிலும் கட்டிகாத்துக் கொண்டு வருகிறது. அல்மோராவில் உள்ள கல்வி நிலையங்களில் சிறந்த கல்வி போதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். உத்தரகண்டின் தலைநகர் டேராடூனுக்கு அடுத்து பிரபலமான மலைநகர் அல்மோரா. கல்வி, ஆன்மிகம், வாணிபம், விவசாயம், கம்பள விரிப்புக்கள், கலாசாரப் பெருமைகள் என பன்முகங்களைக் கொண்டது இந்நகரம்.

அல்மோரா நகரை நெருங்க நெருங்க மக்கள் சந்தடியும், கட்டிடங்களின் நெருக்கவும்/பெருக்கமும் தெரிய ஆரம்பித்தது. தேவபூமியில் இருந்தாலும் நகரத்துக்கே உண்டான மாசுபடுதல் எனும் சாபத்தில் இருந்து அல்மோராவால் தப்பிக்க இயலவில்லை என்பதுதான் உண்மை. 

அல்மோராவின் பிரதான சாலைகளிலேயே குப்பைகளும், சாக்கடைக் கழிவு நீரும் வழிந்து கொண்டிருந்தது. பன்றிகளும் ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்ததை கண்டோம். எங்கள் இப்போதையப் பயணத் திட்டத்தில் அல்மோரா இடம் பெறவில்லை. 

எனவே நாங்கள் அல்மோராவைக் கடந்து ஜாகேஷ்வர் செல்லும் பாதையில் பயணித்தோம். எங்களது காலை சிற்றுண்டியை எங்கே அருந்துவது என்ற கேள்விக்கு மனோஜ் அல்மோராவை தாண்டி செல்வோம் அங்கேதான் கோலு தேவதா மந்திர் இருக்கிறது அந்த கோவிலை தரிசித்து விட்டு அங்கேயே உள்ள சிற்றுண்டி சாலையில் சாப்பிடலாம் என்று கூறினார்.

அல்மோராவில் இருந்து ஜாகேஷ்வர் செல்லும் வழியில் சித்தாய் (Chitai)எனும் ஊரில் இருந்த கோலு தேவதா மந்திர் என்ற கோவிலுக்கு போனோம். சாக்ஷாத் பரமசிவனின் அம்சமாக இந்த கோலுதேவதா போற்றி வணங்கப்படுகிறார்.

கோலு தேவதாவின் கதை மிகவும் சுவாரசியமானது.

(பகிர்தல் தொடரும்)

4. தேவபூமியில் சில நாட்கள் - ஜாகேஷ்வர்(உத்தர்கண்ட்) யாத்திரை_2012

4. தேவபூமியில் சில நாட்கள். 

திருச்சிற்றம்பலம்.
காயத்தில் பாம்பு கழுத்திலே நஞ்(சு)இடத்தில்
வேயனைய தோளினாள் வெண்சடையில் – தோயமொடு
பிஞ்சு மதிசுமப்பாய் பெம்மானேநின்னையென்றன்
நெஞ்சில் சுமப்பேன் நிதம்.
(வேட்டை முதற்பெயரோனின் பிரதோஷப் பாடல்களில் இருந்து) நன்றி: இரத்தினமாலை குழுமம்.

ராம்கரில் இருந்து புறப்பட்டு ஜாகேஷ்வர் நோக்கி பயணம் தொடர்ந்த போது நாங்கள் மேற்கொண்ட மலைப்பாதை பயணம் ரம்மியமான காட்சிகளை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கியது. 
பொழுது புலர்ந்து சற்றே மூடுபனி விலகத் தொடங்கிய அந்த நேரத்தில் காலைக் கதிரவனின் பொற்கிரணங்களில் குளித்திருந்த இமய மலையின் எண்ணற்ற இயற்கைக் காட்சிகளை என்னென்று சொல்வது! எப்படிச் சொல்வது! வானுயர்ந்த மலைமுகடுகளும், பள்ளத்தாக்கின் மரகதப் புல்வெளிகளும், வளர்ந்தோங்கிய பைன், ஓக், தேவதாரு மரங்களும், காட்டுச் செடிகளின் கிளைகளில் பல்வேறு வண்ணச் சிதறல்களாய் விளங்கிய பூங்கொத்துக்களும், இயற்கையெனும் இளநங்கையின் சந்தோஷச் சிரிப்புக்களாய் வெளிப்பட்டன. கம்பனோ, காளிதாசனோ, கீட்சோ அல்லது பாரதியோ இப்போதும் இங்கே இருந்திருந்தால் நமக்கு மீண்டும் நிறைய கவிதைகள் கிடைத்திருக்குமே என்று எண்ணிக கொண்டேன்.

ஏன், இப்போதைய காலகட்டத்தில் நம் இரத்தினமாலைக் குழுமத்தின் நாயன்மாரும்(சிவசிவ), அனந்த்ஜீயும், ஆசுகவி டாக்டர்  சங்கர்குமாரும் இந்தக் காட்சிகளைக் கண்டிருந்தால் எவ்வளவு சிவநேசக் கவிதைகள் நமக்கு கிடைத்திருக்கும்? என்றும் எண்ணிக கொண்டேன். என்னையும் ஒரு பொருளாக்கி, நாயைச் சிவிகையில் ஏற்றியது போல ஏதும் அறியாத என்னை இறைவன் இது போன்ற இடங்களுக்கெல்லாம் அனுப்பி எனது ஆணவத்தை குறைத்துக் கொண்டிருக்கிற சிவக் கருணையை எண்ணி எண்ணி ஆடல்வல்லானுக்கு என் நன்றிதனைக் இதயபூர்வமாக கூறிக் கொண்டிருந்தேன்.

அந்தக் குளிரிலும் காலை நேரத்தில் சின்னஞ்சிறு குழந்தைகள் அழகான சீருடை அணிந்து புத்தகப் பைகளுடன் தங்களது பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். இந்த ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகள் மலைப்பாதைகளில் குறைந்தது நான்கைந்து கி.மீ தூரமாவது நடந்தே செல்கிறார்கள். நடக்கும் போது நான்கைந்து குழந்தைகள் குழுவாகச் சேர்ந்து கொண்டு செல்கின்றனர். காலைக் குளிரை பொருட்படுத்தாது அவர்கள் பள்ளிக்கு செல்கிறார்கள். அவர்களது பெற்றோர்கள் பள்ளி வரை உடன் வருவதில்லை. எனக்கு நம்மூர் காட்சிகள் நினைவுக்கு வந்தன. காலையில் அவைகளை எழுப்பி பள்ளிக்கூடம் வரை உடன் செல்வதோடு மட்டுமல்லாது அந்தக் குழந்தைகள் வகுப்பறைக்குள் செல்வது வரை டாட்டா காட்டி விட்டு வரும் பெற்றோர்களது நினைவு வந்தது. நாம் நம் குழந்தைகளை அதிகமாக செல்லம் கொடுத்து comfort zoneஇல் வைத்து வளர்த்து அவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் உறுதி இல்லாதவர்களாக்கி விடுகிறோமோ என்று அஞ்சுகிறேன். சமவெளி மனிதர்களை விட மலைவாழ் மனிதர்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் உறுதியுடன் விளங்குகிறார்கள் என்றே நான் நம்புகிறேன்.

அதைப்போலவே பள்ளி மாணவ, மாணவியர்களும் நடந்து செல்வதைக் கண்டேன். தினமும் காலையும், மாலையும் இருவேளைப் பொழுதிலும் ஐந்து கி.மீ தூரம் நடப்பது எந்த அளவுக்கு அவர்களது நலவாழ்வை மேம்படுத்துகிறது தெரியுமா? உத்தரகண்ட் மாநில மக்கள் இதன் காரணமாக நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்கள். எல்லா வயது ஆடவரும், பெண்டிரும் உடல் நலத்தில் வளமாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அரசின் நிதி பயனுள்ள மற்ற திசைகளில் செலவு செய்யப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். கல்வியில் இந்த நிதி முறையாக பயன்படுத்தப்படுவதால் சிறந்த கல்வி தரும் மாநிலங்களில் ஒன்றாக உத்தரகண்ட் மாநிலம் மாறி வருகிறது.

அதுமட்டுமின்றி இந்த மாநிலம் மின்பற்றாக்குறை இல்லாத தன்னிறைவு பெற்ற மாநிலமாகவும் விளங்குகிறது. சுமார் ஏழு மின் உற்பத்தி நிலையங்களை உத்தரகண்ட் மாநிலம் பெற்றுள்ளது. தனது பயன்பாட்டுக்குப் போக உபரி மின்சக்தியை தனது அக்கம்பக்கத்து மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உ.பி., மற்றும் டெல்லி உட்பட பல மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறது இந்த மின்தடை இல்லாத மாநிலம்.

கோடை/மழைக்காலம் என எல்லா நேரங்களிலும் வற்றாத நீர்வளம் இருப்பதினால் தண்ணீர்ப் பற்றாக்குறை இந்த மாநிலத்தில் இருப்பதில்லை. விவசாயத்திலும் மலைப்பகுதிகளில் Terrace farming எனப்படும அடுக்குமாடி விவசாய உத்தியைப் பயன்படுத்தி நெல், கோதுமை, மற்றும் காய்கறிகளை பயிரிட்டுக் கொள்கிறார்கள். கால்நடைகளை வளர்ப்பதால் தேவையான பால், தயிர், நெய் போன்றவை தங்கு தடையின்றிக் கிடைக்கின்றன. பள்ளிச் சிறார்கள் மட்டுமின்றி எல்லா வயதினரும் குறைந்தது ஆறேழு கி.மீ தூரமாவது நடந்தே சென்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாலும், விவசாயம் போன்ற கடின உடல் உழைப்பில் மாநில மக்கள் ஈடுபடுவதாலும் தேவபூமியான உத்தரகண்டின் மலைப்பகுதி எல்லா வளங்களும் பெற்று கொழிக்கிறது. தேவபூமி என்பதால் இறையருள் நிறைய இருக்கிறது. செல்லும் வழி தோறும் கோவில்களைக் கண்டேன். மக்கள் மிகவும் இறைநேசம் கொண்டு விளங்குகிறார்கள். அன்புமயமாக விளங்குகிறார்கள். இமயத்தில் வாழ்வதால் நற்குணங்களில் இமயமாக விளங்குகிறார்கள்.

அடுத்த ஒரு மணிநேர நீண்ட நெடுகிய மலைப்பாதை பயணத்தில் நாங்கள் அல்மோராவை நெருங்கி கொண்டிருந்தோம். அல்மோரா உத்தரகண்ட் மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்று. அல்மோரா ஒரு புராதனமான நகரும் கூட. ஒரு காலத்தில் ராஜவமிசத்தினரின் தலைநகரமாக விளங்கிய அல்மோரா இப்போது மாவட்டத் தலைநகராக இருக்கிறது. இந்தப் பகுதி கத்யூரி மற்றும் சாந்த் வமிச மன்னர்கள் ஆண்ட பகுதி. சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாக அரசர்கள் இந்த பகுதியை பரிபாலனம் செய்து கொண்டிருந்தார்கள். சுவாமி விவேகானந்தர் தனது பரிவ்ராஜக வாழ்க்கையின் போது அல்மொராவில் அரச விருந்தினாராக சில காலம் இருந்தது குறித்து எழுதி இருக்கிறார். ஆங்கிலேய ஆட்சியாளர்களும் உத்தரகண்ட் பகுதியை ஆண்டிருக்கிறார்கள். நேபாள கோர்காக்களின் படையெடுப்பு, முகலாயர் படையெடுப்பு என்று இந்த வளமான பூமியை தொன்று தொட்டு சமவெளி மக்கள் ஆக்கிரமித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.

மகாபாரத காலத்து மன்னர்களைப் பெற்ற இடம். உண்மையை மட்டுமே பேசுவதற்காக தனது ராஜ்யம், குடும்பம் அனைத்தையும் இழந்து, மயானத்தில் பிணம எரிக்கும் தொழிலை மேற்கொண்ட ராஜா ஹரிச்சந்திரன் உத்தரகண்டின் சாந்த் வமிசத்தினை சார்ந்தவர் என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பலபகுதிகளில் இருந்தும் மக்கள் திருக்கயிலை-மானசரோவரம், பத்ரினாதம், திருக்கேதாரம் என்று தொன்று தொட்டு யாத்திரை வருவதால் இனக்கலப்புகள் நிறைய நேர்ந்திருக்கின்றன. கன்னியாகுமரி, கருநாடகம், ஆந்திரப்பிரதேசம் என்று பலபகுதிகளில் இருந்து மக்கள் இங்கே வந்து உத்தரகண்ட்வாசிகளாக மாறிவிட்டார்கள் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். நமது சங்க இலக்கியங்களில் கூட மகாபாரத்து போருக்கு படைகளும், உணவும் தந்து உதவிய பெருஞ்சோற்று உதியன் எனும் மன்னனைப் பற்றிய செய்திகள் வருகின்றது. இமயவரம்பன் சேரலாதன் ஆரியமன்னர்களுடன் போரிட்டு, இமயத்தில் சேரனின் இலச்சினை கொடியை பறக்கவிட்டு, கண்ணகிக்கு சிலை செய்யக் கல்லினை கங்கையில் நீராட்டி இமயத்தில்  இருந்து கொண்டு வந்ததாக பள்ளி நாட்களில் படித்தது நினைவுக்கு வந்தது.

ஆதி சங்கரரரின் தொடர் இமாலய விஜயம் நிறைய நம்பூதிரிகளையும், தந்திரிகளையும் இம்மாநிலத்தின் கோவில்களில் கொண்டு சேர்த்திருக்கிறது. அதன் காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கோவில்களில் கேரள தந்திரிகள் பல நூற்றாண்டுகளாக பணி புரிந்துவருகிரார்கள். ஆதிசங்கரர் வகுத்துத் தந்த பூஜாவிதிகள் படிதான் இன்றளவும் கோவில் பூசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் தங்கள் நீண்டநாளைய வாழ்க்கை முறைகள் காரணமாக பட் எனவும், பண்டிட் எனவும் தங்களை அழைத்துக் கொண்டாலும், பூர்வாசிரமத்தில் இவர்கள் ஆதிசங்கரரின் நியமனம் பெற்ற நமது நாட்டுத் தந்திரிகளே என உத்தரகண்டின் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. நேபாளத்தின் பசுபதிநாதரின் கோவிலில் கூட இன்றளவிலும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தந்திரிதான் பூசை செய்கிறார்.

(பகிர்வுகள் தொடரும்)

Saturday, November 2, 2013

தீபாவளி வாழ்த்துக்கள்... (2013)

ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதி...

மாசற்ற ஜோதி, மலர்ந்த மலர்ச்சுடர்..

நாத விந்து கலாதி நமோ நம 
தீப மங்கள ஜ்யோதி நமோ நம.


உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அன்பு, மகிழ்ச்சி, ஆரோக்கியம், நல்லறம் விளங்கிப் பிரகாசிக்க இறையருள் துணை வேண்டுகிறேன்.

அன்புடன்

அஷ்வின்ஜி@ஹரிஹரன்
வேதாந்த வைபவம் வலைப்பூ.

Monday, September 9, 2013

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.2013

வரம் தரும் தும்பிக்கை

வளம் தரும் நம்பிக்கை.


இறையருள் நாடுகிறேன்.

அஷ்வின்ஜி 
வேதாந்தவைபவம் வலைப்பூ.

Sunday, April 14, 2013

3. தேவபூமியில் சில நாட்கள்.

3. தேவபூமியில் சில நாட்கள். 

ஓம் நமசிவாய.

செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 658
-அச்சோப்பதிகம்(திருவாசகம்)

ஜாகேஷ்வர் பயணக் கட்டுரை தொடருகிறது..

நாங்கள் பயணம் மேற்கொண்டிருந்த அந்த நேரம் (மார்ச் 2012) ஹோலிப் பண்டிகைக் காலமாக அமைந்திருந்தது. உத்தரகண்ட் மாநிலத்தில் ஹோலிப் பண்டிகையை வெகு விமரிசையாக ஒருவார காலத்துக்குக் கொண்டாடுவார்களாம். வட மாநிலங்களில் நிலவிய உறைய வைக்கும் குளிர்காலம் போய் வரவிருக்கும் கோடைக்காலத்திற்கு முகமன் கூறும் வசந்த(இளவேனில்)காலத் திருவிழாவாக காமன் பண்டிகை(ஹோலி)கொண்டாடப்படுகிறது.

‘குமாவுன் பிரதேசத்து ஹோலி கொண்டாட்டங்கள் மற்ற எல்லா மாநிலத்து ஹோலிப் பண்டிகையை விட மிகச் சிறப்பாக இருக்கும். நீங்கள் சரியான நேரத்துக்குத் தான் வந்திருக்கிறீர்கள் என்றார் திரு.மனோஜ் பட் அளவிலா மகிழ்ச்சியுடன்.

ஹோலிப் பண்டிகைக்காக எட்டாம் தேதி அன்று அரசு விடுமுறையாக உத்தர்கண்ட் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது நாங்கள் ஐந்தாம் தேதி காத்கொதாமில் இருந்து ஜாகேஸ்வருக்கு பயணித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் உ.பி. மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களும் அடங்கி இருந்தன. ஆறாம் தேதி (நாளைக்கு) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

‘இந்த சூழலில் எங்கள் பயணம் பாதுகாப்பானதாக இருக்குமா? என்று கேட்டதற்கு, ‘உத்தரகண்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீராக இருக்கும். அச்சம் வேண்டாம் என்று திரு.மனோஜ் எங்களுக்கு உறுதி அளித்தார். நேரம் கேட்ட நேரத்தில் வந்து விட்டோமோ என்ற ஐயத்தில் இருந்த எங்களை அன்பர் மனோஜின் வாக்குறுதி சற்று மன அமைதி கொள்ளவைத்தது.

அன்பர் மனோஜ் எங்களது பயணத் திட்டத்தைப் பற்றி விரிவாக விசாரித்தார். எந்த தேதியில் நாங்கள் காத்கோதாம் திரும்ப வேண்டும் என்பதை உறுதி செய்து கொண்டார். அதன் அடிப்படையில் எங்களது சுற்றுலா திட்டத்தை நாங்கள் வகுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறினார். உண்மையில் குளிர்காலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் உத்தர்கண்ட் மாநிலத்தின் மலைப்பாதைகள் மும்முரமாக சீர்செய்யப்பட்டுக் கொண்டு வருகின்றன. உத்தர்கண்ட் அமைந்திருக்கும் இமய மலைப்பகுதி அடிக்கடி நிலநடுக்கங்களினாலும், நிலச் சரிவுகளாலும் பாதிப்படைக்கூடியவை. எனவே குளிர்காலத்தில் நிகழ்ந்த பணிப்போழிவுகளால் ஏற்படும் நிலச்சரிவுகளை கோடைக்காலம் துவங்குவதற்கு முன்னர் சரிசெய்தாக வேண்டும். 

கோடை முடிந்ததும் ஒரு மழைக்காலம் துவங்கும் போது மீண்டும் நிலச் சரிவுகள் ஒருமுறை ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன. பாரத இராணுவத்தின் பார்டர்ஸ் ரோடு ஆர்கனைசேஷன் (BRO) இந்த சாலைகளை செப்பனிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தோ திபெத்தியன் எல்லை படைக் காவல் பிரிவும் (ITBP) இமயமலைச் சாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளது. சாலைகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து அறிவிப்புப் பலகைகளில் தங்களை இமயத்தின் நண்பன் என்று ITBP பெருமையுடன் கூறிக் கொள்கிறது.

காத்கோதாமில் இரயிலில் இருந்து இறங்கியதும் அந்த அதிகாலைக் குளிரைச் சமாளிக்க சூடான பானம் ஏதாவது அருந்தலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்த நாங்கள் காரில் பெட்டி படுக்கைகளை காரின் டிக்கியில் வைத்து விட்டு ஏறி அமர்ந்ததும் நண்பர் மனோஜிடம் எங்களது தேநீர்த் தேவையை சொல்லத் தவறி விட்டதால், அவர் காரை ஓட்டத் துவங்கிவிட்டார். அந்த அதிகாலை நேரத்தில் காத்கோதாமை விட்டால் மலைப்பாதையில் வேறெங்கும் தேநீர்க்கடைகள் திறந்து இருக்காது என்பது எங்களுக்கு பிற்பாடு தான் தெரியவந்தது!

எனது சஹாயாத்திரியான திரு.மங்களீஸ்வரன் ஒரு காப்பிப் பிரியர். காப்பியை விரும்பி சாப்பிட நேரம், காலம், காரணம் எதுவும் பார்க்காத அன்பர். நானும் நண்பர் நடராஜனும் கிடைத்தால் சரி, கிடைக்காவிட்டாலும் சரி என்கிற ரகத்தைச் சார்ந்தவர்கள். மனோஜிடம் காலைக் காப்பி/தேநீர் பற்றிய காலம் கடந்த கோரிக்கையை நாங்கள் வைத்தபோதுதான் தெரியவந்தது காலை ஏழு மணி சுமாருக்கு வழியில் ஏதாவது கடை திறந்திருக்கலாம் என்பது.

'அடடே. இவங்களை நம்பினது தப்பாப் போச்சே!  காத்கோதாமிலேயே காப்பி சாப்பிட்டிருக்கலாமே' என்று மனசுக்குள் நொந்து கொண்டே நண்பர் மங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு எங்களுடன் பயணித்துக் கொண்டிருந்தார். எனது பென் டிரைவினை மனோஜிடம் தந்து அதில் உள்ள பாடல்களை கார் ஸ்டீரியோவில் இசைக்கச் சொல்லிக் கேட்டேன். செவிக்குணவில்லாத போது தானே வயிற்றுக்கு ஈய வேண்டும்? சுவைநீர்/தேநீர் மோகத்தை சற்றே மறக்கக் கொஞ்சம் நல்ல தமிழில் பக்தி இசை கேட்டுக் கொண்டே வருவோம் என்று எண்ணிய எனது வேண்டுகோளை அன்பர் மனோஜ் தயங்காது நிறைவேற்றவும் காதிற்கினிய நெஞ்சை அள்ளும் அருமையான பக்திப் பாடல்கள் பின்னணியில் இசைக்கத் துவங்கின. நண்பர் மனோஜ் இசையை பாராட்டி ரசித்தார். 


எங்களது கார் பீம்தால் (Beemtal) என்ற ஊரை நெருங்கத் துவங்கியது. காத்கொதாமில் இருந்து நைனிதால் (Nainital) செல்லவும், முக்தேஷ்வர் செல்லவும் பீம்தால் என்ற இந்த ஊரில் இருந்துதான் சாலைகள் பிரிகின்றன. நைனிதால் போன்றே பீம்தாலிலும் ஒரு அழகிய ஏரி இருக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளைக் வெகுவாகக் கவர்ந்த இடங்களில் ஒன்று இந்த பீம்தால். சரியாக வெளிச்சம் இல்லாத சூழலில் நாங்கள் பயணித்த கார் பீம்தால் ஏரியைக் கடந்து சென்ற போது, ‘பகல் நேரத்தில் பார்த்தால் இந்த ஏரியின் உன்னத அழகு புரியவரும் என்றார் மனோஜ் சற்றே கர்வத்துடன்.

மூடுபனி மூடிய அந்த ஏரியை அரையிருட்டில் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே நாங்கள் அந்த ஊரைக் கடந்து சென்றோம். மெதுவாக பொழுது புலரத் தொடங்கியதும் சாலையின் இருமருங்கிலும் கண் கொள்ளா இயற்கைக் காட்சிகள் எங்களுக்குக் காணக் கிடைத்தன. ஓக் மரங்களும், பைன் மரங்களும் பசுமையாக ஓங்கி வளர்ந்து சாலையின் இருமருங்கிலும் நிறைந்திருக்க, குமாவூன் பூக்கள் என அவ்வூர் மக்கள் செல்லமாக அழைக்கும் காட்டுப்பூக்கள் பல நிறங்களில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. கண்ணுக்கும் செவிக்கும் கிடைத்த விருந்தில் மெய்ம்மறந்து நாங்கள் பயணித்தோம். 

சுமார் முக்கால் மணிநேரப் பயணத்துக்குப் பின்னர் ராம்கர் (Ramgarh) எனும் இடத்தில் திறந்திருந்த ஒரு தேநீர் விடுதியில் மனோஜ் காரை நிறுத்தினார். ராம் கர் ஒரு அழகிய சிற்றூர். மேகங்கள் சாலையைக் கடந்து கொண்டிருக்க, நாங்கள் காரை விட்டு இறங்கியதும், சிலீர் என்று காற்று முகத்தில் அடித்தது. நிச்சயம் தேநீர் சாப்பிட்டே ஆகவேண்டும் என்கிற உணர்வினை இந்த குளிர் எங்கள் அனைவருக்குமே உருவாக்கி விட்டது.

தேநீர்க் கடையில் அமர்ந்து நாங்கள் நால்வரும் தேநீர் அருந்தினோம். அடுத்து சிற்றுண்டி எங்கு கிடைக்குமோ/எப்போது கிடைக்குமோ என்ற பயத்தில் ரஸ்க் மற்றும் உப்புச் சப்பில்லாத பஃப் என்று தேநீரோடு சேர்த்து அவற்றையும் எதற்கும் இருக்கட்டும் என்று உள்ளே தள்ளி வைத்தோம். சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஒரு சில புகைப்படங்களை அந்த இடத்தில் எடுத்துக் கொண்டு ராம்கரில் இருந்து காரில் ஏறி அமர்ந்து கொண்டு பயணத்தை தொடங்கினோம்.

(பகிர்தல் தொடரும்)

ஜெய விஜயீ பவா.

ஜெய விஜயீ பவா.



எல்லார் வாழ்விலும் 


விஜய ஆண்டு 

வெற்றி தரும் ஆண்டாக மலர 

வாழ்த்துக்கள்.

பணிவான வணக்கங்களுடன்,

அஷ்வின்ஜி

Monday, January 14, 2013

தை மகள் வந்தாள்-நலம் கோடி தரவே.



சிவாயநம..

நாவினிக்கும் பொங்கல் 
நெஞ்சினிக்க வாழ்த்து



தை மகள் வந்தாள் 
நலம் கோடி தரவே.

உங்கள் வாழ்க்கை வளம் பெற 

வாழ்த்திப் பாடும் சொற்கள் எல்லாம்,

வந்து சேரட்டும் உங்கள் வாசல் கதவு தட்டிடவே...

அன்பே சிவம்..
அஷ்வின்ஜி@A.T.Hariharan
சென்னை 

Please visit: